Benefits Of Meditation: தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!
சமீப காலமாக அதிகமான மக்கள் தியானத்தின் நன்மைகளைப் பற்றி அறிந்து வருவதால் பிரபலமடைந்து வருகிறது. தியானம் ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலமாக மாற்றும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. தியானம் என்பது நம்முடைய எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி நமக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவர உதவுகிறது. இது நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கிறது. தியானம் செய்வதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், நன்மைகள் (Benefits Of Meditation) மற்றும் அதனை எவ்வாறு தொடங்குவது என்பதை பற்றி தெளிவாக காண்போம்.
தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
1. மன அழுத்தத்தை குறைக்கிறது

பலர் தியானத்தை முயற்சி செய்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று மன அழுத்தம் ஆகும். பல ஆராய்ச்சி முடிவுகள் தியானம் நமது மன அழுத்தத்தை குறைத்து சுய விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதாக கூறுகிறது. நீங்கள் மனதளவில் பலவீனமாக உணர்ந்தால் கட்டாயமாக தியானங்களை முயற்சி செய்வதன் மூலமாக அதிலிருந்து வெளி வரலாம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் நம்முடைய கவனம், படைப்பாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகள் போன்றவை அதிகரிக்கிறது.
2. நினைவாற்றலை அதிகரிக்கிறது
Benefits of meditation for mental health: நாம் வயதாகி முதுமை அடையும் பொழுது நினைவாற்றலை இழந்து மறதி ஏற்படுவதை உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் படிக்கின்ற குழந்தைகளுக்கு கூட இந்த மறதி பிரச்சனை பரவலாக காணப்படுகிறது. தியானம் நம்முடைய நினைவாற்றலை மேம்படுத்தி கூடுதலாக பல தகவல்களை நம்முடைய நினைவில் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது நம்மை மனதளவில் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
3. போதைப் பழக்கத்தை எதிர்த்துப் போராடும்
பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற தீய பழக்கங்களில் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். இவைகளைப் போன்றே மொபைல்களில் கேம் விளையாடுவது மற்றும் சமூக வலைதளங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது போன்றவைகளும் ஒருவகை போதைப் பழக்கமே. இதுபோன்ற நம்மை அடிமையாக்கி வைத்திருக்கும் விஷயங்களில் இருந்து நம்மை மீட்டுக் கொண்டு வர தியானம் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் ஒரு குழந்தைக்கு பெற்றோராக இருந்து இவைகளில் இருந்து உங்கள் குழந்தைகளை மீட்டெடுக்க தியானப் பயிற்சிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
இதையும் படியுங்கள்: யோகா செய்வதால் கிடைக்கும் பயன்கள்.!
4. நல்ல உறக்கத்திற்கு வழிவகிக்கிறது

நாம் உறங்க செல்லும் பொழுது நம்முடைய மனதில் பல எண்ணங்கள் தோன்றி நம்முடைய உறக்கத்தை முற்றிலமாக தடுக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் நாம் உறங்கும் நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். சரியான உறக்கம் இல்லை என்றால் மனநிலை, சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் நடத்தை போன்றவற்றில் தடுமாற்றம் ஏற்படும். இது மனநலம் மட்டுமின்றி உடல் ரீதியான பல பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தும். நீங்கள் அமைதியான உறக்கத்தை பெற விரும்பினால் தியான பயிற்சிகளை மேற்கொள்வதே சரியான மருந்தாகும்.
5. கவலையை மறக்கச் செய்யும்
Benefits of meditation for anxiety: மனிதனாக பிறந்த நமக்கு தேவையானவை அனைத்தும் கிடைத்தாலும் ஏதோ ஒன்றை நினைத்து மனம் கவலை அடைந்து கொண்டுதான் இருக்கும். சிலருக்கு பணி புரியும் இடம் அல்லது குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை நினைத்து கவலைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். தியானம் நமது மனதை பக்குவப்படுத்தி கவலைகளை மறக்கச் செய்கிறது.
6. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
தியானம் நமது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களின் அழுத்தத்தை குறைத்து இருதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவுகிறது. நம்முடைய வாழ்க்கை முறையில் உடல் பருமன், தீய பழக்க வழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது. இது காலப்போக்கில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும். எனவே உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் தியானங்கள் செய்வதற்கு பரிந்துரை செய்கின்றார்கள்.
7. அன்பானவர்களாக மாறுவீர்கள்
சிலர் மற்றவர்களிடம் பேசும்பொழுது காரணம் இன்றி கோபமாகவும் எரிச்சலாகவும் பேசுவதை பார்த்திருக்க முடியும். இது நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நம்மீதான தவறான எண்ணத்தை உருவாக்கும். சில வகையான தியானங்கள் உங்களைப் பற்றி நீங்களே முழுமையாக புரிந்து கொள்ள உதவும். தியானப் பயிற்சிகள் நம்மை இரக்கமானவர்களாகவும் மற்றவர்களிடம் அன்பு கலந்த அக்கறையுடனும் பழகும் மனப்பான்மையை கற்றுத் தருகிறது. இதனால் சமுதாயத்தில் நம்மீதான மதிப்பு உயரும்.
8. வலியை குறைக்கிறது
தியானம் ஒருவருடைய உணர்ச்சியை கட்டுப்படுத்தி நாள்பட்ட வலிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இதனால் நம்முடைய வலி முழுமையாக நீங்கவில்லை என்றாலும் அந்த வலியை சமாளிக்க கூடிய திறன் மேம்படுவதை நம்மால் உணர முடியும். தியானத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு எது சிறந்தது என்பதை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.
தியானத்தை எப்படி தொடங்குவது:

- தியானம் செய்ய தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கான இடத்தையும் நேரத்தையும் முடிவெடுங்கள்.
- தியானம் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்று எந்த வரைமுறையும் கிடையாது. ஆனால் 15 லிருந்து 20 நிமிட தியானப் பயிற்சி ஒரு நல்ல வழிகாட்டியாக கருதப்படுகிறது.
- நாற்காலியில் அமர்வதை தவிர்த்து தரையில் துணியை அல்லது பாயை விரித்து அதன் மேல் கால்களை மடக்கி அமரலாம்.
- கண்களை மூடி மெதுவாக உங்களது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவதை கவனியுங்கள்.
- உங்கள் அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்தி சிறிது நேரத்தில் கவனத்தை சுவாசத்துடன் இணைக்க முயற்சி செய்யுங்கள்.
- இறுதியாக கண்களை மெதுவாக திறந்து தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.
தியானத்தின் போது நாம் செய்யும் பொதுவான தவறுகள்:

Image by shurkin_son on Freepik
- தியான பயிற்சிகளை தொடங்கிய சில தினங்களிலேயே அதற்கான முழுமையான பலனை எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் தொடர்ச்சியாக இதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளும் பொழுது தான் மெதுவான மாற்றங்களை உணர முடியும்.
- நாம் மிகவும் சோர்வாகவோ, பசியுடனும் மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் பொழுது தியானம் செய்ய முயற்சிக்கக் கூடாது. உணவு உண்ட இரண்டு மணி நேரம் கழித்து தொடங்குவது நல்லது.
- பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இடம் இரைச்சல் மிகுந்ததாக இல்லாமல் அமைதியான சூழலாக இருக்க வேண்டும். மோசமான சுற்றுச்சூழல் நம்முடைய கவனச் சிதறல்களுக்கு வழிவகுக்கும்.
- நாம் செய்யும் பயிற்சி சரியான முறையா என்பதை பற்றி கவலைப்படக் கூடாது. அதேபோன்று அடிப்படை தியான பயிற்சிகளை கற்றுத் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு மேம்பட்ட நிலையில் உள்ள பயிற்சிகளை முயற்சி செய்யக் கூடாது.
- உங்கள் உடலை வற்புறுத்தி தியானம் செய்ய வேண்டாம். முடிந்தவரை அனைத்து சூழ்நிலைகளிலிருந்து உங்களை விடுவித்து பிறகு பயிற்சியை தொடங்குங்கள்.
பொறுப்புத் துறப்பு:-
இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகளை மட்டும் கொண்டு உடல் நலப் பிரச்சினைகள் அல்லது நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடல் நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறவும். TamilCare.in தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் கொண்டு நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் சொந்த முயற்சியில்தான் செய்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் சுயமான முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.